ந
கத்தோலிக்கத் திருச்சபை நமக்கு நாற்பது நாள்களை தவக்காலத்தில் அருளின் நாள்களாகத் தருகின்றது. இந்த நாள்கள் கிறிஸ்துவின் மீட்பு நிகழ்வுக்கு (பாடுகள், சிலுவைமரணம், உயிர்ப்பு) நம்மை தயாரிப்பதற்காகவே. இந்த நாற்பது நாள்களின் பின்னணி இன்றைய சிந்தனைக்கு உதவலாம்.
இஸ்ராயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் இருந்தார்கள். பாலை நிலத்திற்கு வருவதற்கு முன்பாக நாணுறு ஆண்டுகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்து வந்தார்கள். எகிப்து நாட்டில் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களிடையே பிளவுகள் இருந்தன. கடவுள் மோசே வழியாக அவர்களை மீட்டு பாலை நிலத்திற்கு அழைக்கிறார். பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகளாக இறைவன் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். பயிற்சியின் கருப்பொருளானது ‘ஒரே கடவுள்; ஒரே மக்கள்’. இந்தப் பயிற்சியில் நாற்பது ஆண்டுகளாக மக்கள் ஒன்றிணைக்கப்படுகின்றார்கள். இந்த நாற்பது ஆண்டுகளும் இறைவன் அவர்களோடு உடனிருந்தார். இரவிலும் பகலிலும் அவர்களோடு உடன் பயணித்தார். இரவிலே விளக்குத் தண்டாகவும், பகலிலே மேகத்தூணாகவும் இறைவன் உடனிருந்தார் (விப 13:22). அந்த நாற்பது ஆண்டுகள் இறையனுபவம் பெறுவதற்கே அன்றி வேறு எதற்குமல்ல.
இயேசு திருமுழுக்கிலே இறையனுபவம் பெற்றபொழுது (நீரே என் அன்பார்ந்த மகன் உம்மில் நான் பூரிப்படைகிறேன்) நாற்பது நாள்களாக பாலை நிலத்தில் தனித்து இருக்கிறார். இந்த நாற்பது நாள்களும் அவர் தனக்கு கிடைத்த இறையனுபவத்தை தன்மயமாக்குகிறார். இறைவனை முழுமையாக அறிந்து, அவரையே முழுமையாகப் பற்றிக் கொண்டு, அவருடைய இறையாட்சியை போதிப்பதே தன்னுடைய தலையாயப் பணியாகக் கொண்டு பாலை நிலத்தை விட்டு வெளியேறுகிறார்.
ஆகவே, இந்த நாற்பது நாள்களையும் தாய் திருச்சபை நமக்கு கொடுப்பதற்கு காரணம் நாமும் இயேசுவைப் போன்று இறைவனை முழுமையாக அனுபவித்து, அந்த இறையனுபவத்தை தன்மயமாக்குவதற்கே. நாமும், இந்த நாற்பது நாள்களிலே தவசு செய்கிறோம், செபம் செய்கிறோம், தர்மம் செய்கிறோம். அவைகளெல்லாம் தேவையும் சரியானதுமே. ஆனால் இம்முயற்சிகளில் எல்லாம் நாம் இறைவனின் உடனிருப்பை உண்மையிலேயே உணருகின்றோமா? பல வேளைகளில் இறைவனை மறந்து நாம் நமது பக்தி முயற்சிகளில் ஈடுபடுகிறோம். ஆனால், தவக்காலத்தின் இந்த நாற்பது நாள்கள் இறைவனை நோக்கி திரும்புவதற்கே மற்றும் அவருடைய காலடியில் அமர்வதற்கே. நாம் செய்கின்ற தவசுகள், உதவிகள், செபங்களெல்லாம் பயனற்றவைகளாக ஆகிவிடும். எப்போது? அங்கே இறைவன் இல்லையென்றால். ஆம், அன்புக்குரியவர்களே! இறைவனை நாடுவோம். இறைவன் பக்கம் திரும்புவோம். இதை இந்த நாற்பது நாள்களில் எவ்வாறு நாம் செய்ய முடியும்?
• ஒவ்வொரு நாளும் கால் மணி நேரம் நாம் கோவிலுக்குச் செல்வோம். அங்கு சென்று அவர் பேசுவதை நாம் செவிமடுப்போம் (ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன் என்று சாமுவேல் கோவிலில் கேட்கவில்லையா?).
• கோவிலுக்கு செல்ல இயலாத சூழலில் நம் வீட்டிலேயே விவிலியத்தை எடுத்து வஒரு கால் மணி நேரம் வாசித்து இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்.
• ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து ஒரு கால் மணி நேரம் செபிக்கலாம்.
தவக்காலம் (நாற்பது நாள்கள்) நம்மை முழுமையாக இறைவன் பக்கம் சற்று திரும்பிப் பார்க்கும் காலம். இதுதான் மனம் திரும்புதல் என்பதன் பொருள் ஆகும். நம்முடைய எண்ணங்கள், தேவைகள், ஆசைகள், வேண்டல்கள் இவைகளிலிருந்து திரும்பி இறைவனைப் பார்த்தல். நாம் திரும்புவோம். இறையனுபவம் பெறுவோம்.
Rev. Fr. Theophilus SDB