Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 17 இயேசு எருசலேமில் நுழைதல்

மாற்கு நற்செய்தியில் இயேசு முதல்முறையாக எருசலேமுக்குள் நுழைகிறார் (11ம் அதிகாரம்). இதுவரை எருசலேமைப் பற்றி அவர் கேட்ட எல்லா நல்ல செய்திகளையும் மனதில் கொண்டவராக நுழைந்திருக்க வேண்டும். எருசலேமின் மகிமை, பெருமை, இறைப்பிரசன்னம் போன்றவைகள் அவரது மனதிலே ஆழப் பதிந்திருக்க வேண்டும். எருசலேமில் நுழைந்த உடன் நேரடியாக அவர் கோவிலுக்குள் செல்கிறார். அதைச் சுற்றி பார்த்துவிட்டு மாலை நேரம் ஆனதால் உடனே பெத்தானியா திரும்பி விடுகிறார். ஆக எருசலேம் கோவிலை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்தாரா? அந்த நாள் முழுவதும் கோவிலில் அவர் என்ன செய்திருந்திருப்பார்? மீண்டும் இரண்டாம் நாள் அவர் எருசலேமுக்குச் செல்கிறார். செல்கின்ற வழியிலே பசுமையான அத்திமரத்தைப் பார்க்கிறார். பழம் தேடிச் செல்கிறார். அத்திப் பழம் இல்லாததால் மரத்தை சபித்துவிட்டு எருசலேமுக்குச் செல்கிறார். எருசலேமுக்குச் சென்றவர் மீண்டும் கோவிலுக்குத் தான் செல்கிறார். கோவிலில் நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். “இது என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்றுக் கூறி அங்கிருந்து மீண்டும் பெத்தானியாவிற்கு வந்து விடுகிறார். மறுநாள் காலை மீண்டும் மூன்றாம் முறையாக எருசலேமை நோக்கிச் செல்கிறார். பட்டுப்போயிருந்த அத்திமரத்தைக் கண்டு சீடர்கள் அவரிடம் கூறுகிறார்கள்.

ஆக, இயேசு மூன்று முறை எருசலேமுக்குச் செல்கிறார். மூன்றாவது முறையாக சென்றபோது அவர் திரும்பி வருவதே கிடையாது. இந்த மூன்று நாள்களும் அவர் இரவு ஓய்வுக்கு பெத்தானியா திரும்பி விடுகிறார், எருசலேமில் தங்கவில்லை. பெத்தானியா என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஏழைகளின் வீடு’ என்று பொருள். ஆக, இயேசு ஏழைகளோடு தான் தங்குகிறார், ஏழைகளின் வீட்டில் தான் தங்குகிறார்.

இயேசு செய்தப் புதுமைகளிலே அத்திமரத்தை சபிப்பதுதான் ஒரு எதிர்மறைப் புதுமையாக இருக்கிறது. எல்லாப் புதுமைகளுமே நன்மை பயக்குகின்றவையாக இருக்க வேண்டும் (குணமளித்தல், பேய் ஓட்டுதல், உயிர்ப்பித்தல்). இதனாலேதான் விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள் இது ஒரு புதுமையாக்கப்பட்ட ஒரு உவமை என்று. அத்திமரத்தை சபிப்பதும் அது பட்டுப்போவதும் ஒரு செய்தியை சொல்கிறது. அந்த செய்தி தான் எருசலேம் கோவிலில் வாழ்ந்து காட்டப்படுகிறது.

ஒருவர் அத்திமரத்திற்குச் செல்லும் பொழுது கனிகளைத் தேடித் தான் செல்வார்கள். அதே போல கோவிலுக்குச் செல்லும் பொழுது அங்கே வேண்டலையும், நம்பிக்கையையும் தான் எதிர்பார்ப்பார்கள். அத்திமரம் பசுமையாக இருக்கிறது. இலைகள் அதிகம் இருந்து பார்ப்பவர்களை வரவேற்கிறது. அதேபோல எருசலேம் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது, விற்பதும், வாங்குவதும் போன்ற பணிகள் அதிகமாக இருக்கின்றன, பார்ப்பதற்கும் பெருமையாக இருக்கிறது. அத்திமரத்தில் கனிகள் இல்லை, எருசலேம் கோவிலில் செபம் இல்லை, நம்பிக்கை இல்லை. அத்திமரத்தை சபிக்கிறார், எருசலேம் கோவிலை சுத்தம் செய்கிறார். ஆகவே, அத்திமரத்தை சபித்தல் எருசலேம் கோவில் சுத்தப்படுத்துவதற்கான ஒரு உவமையாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் அது ஒரு புதுமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

எருசலேம் கோவில் கட்டப்பட்ட இடம் அபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிடச் சென்ற இடமாக மரபு சொல்கிறது. அதேபோல் அந்த மலையின் அடியில் உள்ள குகையில் தான் தாவீது சவுலால் விரட்டப்பட்டப் பொழுது தனித்திருந்து இரவு முழுவதும் செபித்தாராம். ஆகவே, எருசலேம் கோவில் அபிரகாம் கடவுள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையை அடித்தளமாக கொண்டிருக்கிறது. அதேபோல் தாவீது அரசனின் செபத்தை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இந்த இறைவேண்டலும், இறைநம்பிக்கையும் தான் கோவிலின் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் செபத்தை மறந்து, இறைநம்பிக்கையை இழந்து, பொருள்களை விற்பதும் வாங்குவதுக்குமான வணிகத்தளமாக மாறிவிட்டது. இதுதான் இயேசுவை கோவிலை சுத்தம் செய்யத் தூண்டுகிறது. இயேசுவும் இதே எதிர்பார்ப்புடன் தான் எருசலேமுக்குள் வந்திருக்க வேண்டும். தன்னுடைய எதிர்பார்ப்புகள் நிகழவில்லை என்ற ஏமாற்றத்தில் அவர் கோவிலை சுத்தம் செய்கிறார். இதன் முடிவாக அவர் போதிக்கின்ற பாடம் “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றை பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்@ நீங்கள் கேட்டபடியே நடக்கும்” (மாற்கு 11:24). செபத்தோடு கூடிய நம்பிக்கையை இயேசு முதல் போதனையாக முன்வைக்கிறார்.

அன்புக்குரியவர்களே! தவக்காலத்தின் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம், பாஸ்கா விழாவின் நிகழ்வுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நாள்களில் நமது இறைவேண்டல்கள் நம்பிக்கையோடு கூடிய இறைவேண்டல்களாக இருக்கின்றனவா? என்று ஆய்வு செய்து பார்ப்பது அவசியமானது. இல்லையேல் நாமும் அதே இயேசுவால் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.