இயேசுவினுடைய பாடுகளைப் பற்றி பேசும் பொழுது வரலாற்று ஆசிரியர்கள் கிரகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றி கி.பி. 32ம் ஆண்டிலே இயேசுவினுடைய பாடுகள் நடந்திருக்கலாம் என சொல்கிறார்கள். மேலும், ஏப்ரல் மாதம் 6ம் தேதி, கி.பி. 32ல் இயேசு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். இயேசுவை கைது செய்ய அவருடைய சீடர்களில் ஒருவரான யூதாசு உதவியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் தன்னுடைய தலைவரை 30 வெள்ளி காசுக்காக காட்டி கொடுத்திருக்கிறார். 30 வெள்ளி காசுகள் ஒரு சாதாரண அடிமைக்கு மீட்பு பணமாக அந்த காலத்தில் கருதப்பட்டது. 30 வெள்ளி காசுகள் ஒரு மனித உயிருக்கு மிகவும் மதிப்பு குறைந்த ஒரு தொகையாகும்.
இயேசு கெத்சமெனித் தோட்டத்தில் செபித்துக் கொண்டிருக்கும் பொழுது யூதாசு அவரை காட்டிக் கொடுக்கிறார் (யோவான் 18:1-2). இயேசுவினுடைய தற்கையளிப்பு இறைசித்தத்தை அறிந்து, அதோடு தம்மையே ஒத்துழைக்கின்ற ஒரு நிகழ்வாகும். இயேசு துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவர் இறைத் திட்டத்தை தன் வாழ்வாக்கி இருந்திருக்கிறார் (மத் 26:39-44). இயேசு ஏன் தன்னையே துன்பங்களுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டோம் என்றால் இயேசுவுக்கு இறைசித்தமும், இறைத்திட்டமும் தான் முன்னிறுத்தப்பட்டு, அவருடைய துன்பங்களும், பாடுகளும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது தெளிவாகிறது. இறைவனும், இறைசித்தமுமே வாழ்வாகவும், உணவாகவும் இருக்கிறது.
இயேசு கைது செய்யப்பட்ட பிறகு பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். நற்செய்திகளின் படி அவர் ஆறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்.
· முதலாவதாக, கயபாவின் மாமனார் அன்னாசினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் (யோவான் 18:13). இந்த அன்னாசு கோவிலிலுள்ள பொருளாதாரத்திற்கு பொறுப்பானவர். அதாவது பலிப்பொருள்களை (ஆடு, மாடுகள்) விற்பது, கோவில் வரி போன்றவைகளுக்கு பொறுப்பாக இருந்தவர். ஆகவே, இவர் இயேசுவின் மேல் ஒரு கோபத்தோடு இருந்திருக்கலாம்.
· இரண்டாவதாக, இயேசு கயபாவிடம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் (யோவான் 18:14). இந்த கயபா தான் மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது என்று கூறி இருந்தவர். இவர் தான் தலைமைக் குருவாக இயேசு பாடுகள் பட்டபோது இருந்தவர்.
· மூன்றாவதாக, மூப்பர் சங்கத்தின் முன் இயேசுவை விசாரணைக்கு இழுத்துச் சென்றார்கள் (லூக் 22:66). மூப்பர் சங்கத்தில் அதிகாரிகள் 73 பேர் அதிகபட்சமாக இருக்க வேண்டும். குறைந்தது 23 பேராவது இருக்க வேண்டும்.
· நான்காவதாக, பிலாத்துவால் இயேசு விசாரிக்கப்படுகிறார் (யோவான் 18:28). பிலாத்து மிகவும் ஒரு கொடூரமான ஆளுநராக இருந்தவர். அப்பொழுது உரோமையில் அரசனாக இருந்த திபேரிசும் ஒரு கொடூரமானவராக இருந்தவர் (பிறர் துன்பத்தில் மகிழ்பவனாக இருந்தான்).
· ஐந்தாவதாக, ஏரோதிடம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு (லூக் 23:6-12).
· ஆறாவதாக, மீண்டும் பிலாத்துவிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். பிலாத்து இயேசுவுக்கு மரணத் தண்டனை அளிக்கிறார்.
இந்த விசாரணைகளில் உள்ள குறைபாடுகள் பின்வருவன:
· யூத சட்டப்படி இரவிலே யாரையும் கைது செய்ய முடியாது.
· இரவிலே யாரையும் காட்டி கொடுக்க முடியாது.
· சாட்சிகளை இரவிலே விசாரிக்க கூடாது.
· சாட்சிகளை விசாரித்தப் பிறகு இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாளாவது கண்டிப்பாக கழிந்த பிறகு தான் அவர்கள் தீர்ப்பிட பட வேண்டும். இந்த யூத ஒழுங்குகளெல்லாம் இயேசுவின் தீர்ப்பில் தவிர்க்கப்படுகின்றன.
இந்த விசாரணைகளின் நடுவில் அவர் கடினமாக தண்டிக்கப்படுகிறார்: ஏளனம் செய்யப்படுகிறார், காறி உமிழப்படுகிறார், சாட்டையால் அடிக்கப்படுகிறார், முள்முடி சூட்டப்படுகிறார். இறுதியில் மரணத் தண்டனை அளிக்கப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி வரை செல்கிறார். கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கிறார்.
ஆம் அன்புக்குரியவர்களே! இவ்வளவு துன்பங்கள், பாடுகள் இருந்தும் இயேசு ஒரு பதிலும் சொல்லவில்லை, அமைதியில் ஏற்றுக் கொள்கிறார், ஏனென்றால் இறைவனுடைய சித்தம், திட்டம் நிறைவேற வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே குறிக்கோள். நாமும் நமது வாழ்க்கையில் இறைத்திட்டத்தை முன்வைப்போம். துன்பங்கள், துயரங்கள் எவ்வளவு இருந்தாலும் அவைகள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.