தனது பாடுகள், இறப்பு ஆகியவைகளுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாக இயேசு வெளிப்படையாக எருசலேமுக்குள் நுழைகிறார். இது அவர் தீயசக்திக்கோ அல்லது எதிரிகளுக்கோ பயப்படாது துணிந்து செல்வதை குறிப்பிடுகிறது. அவர் பயந்து அஞ்சி மறைந்து செல்லவில்லை. துன்பங்களுக்கோ, சாவுக்கோ அவர் பயப்படவுமில்லை. அவர் வெளிப்படையாக மட்டும் வரவில்லை. அதோடு கூட மகிழ்ச்சியாகவும், ஒரு விழாகோலத்தோடும் அவர் எருசலேமுக்குள் நுழைகிறார். அவருடைய எருசலேம் நுழைவானது ஒரு வெற்றிப் பயணமாக மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்படுகிறது.
மேலோட்டமாக பார்க்கும்பொழுது கழுதைக் குட்டி மேல் அவர் அமர்ந்து செல்வது ஒரு இழிவாகத் தோன்றலாம். கழுதைக் குட்டி மேல் இதுவரை யாரும் அமர்ந்ததில்லை என்று சொல்வது அது பழக்கப்படாத ஒரு விலங்காக இருக்கிறது. மேலும் கடினமானது. இதுவரை யாரும் அதில் பயணம் செய்யாததால் அது யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒன்றாக இருக்கிறது. அந்த கழுதைக் குட்டியானது அவருக்கு சொந்தமானது கூட அல்ல. வேறொருவரிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டது போல் இருக்கிறது. இயேசு தன்னுடைய பொது வாழ்வில் இதுபோல பிறருக்கு சொந்தமானவைகளைத் தான் பயன்படுத்துகிறார். அவர் போதிக்கும் போது கூட தனக்கு சொந்தமில்லாத படகில் ஏறி போதிக்கிறார். தனக்கு சொந்தமில்லாத கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். அதே போல இங்கும் தனக்கு சொந்தமில்லாத கழுதைக் குட்டியின் மேல் பயணிக்கிறார். ஒருவேளை பிறரை நாடி, பிறரை சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறாரா? கிறிஸ்தவ வாழ்வு அல்லது சீடத்துவ வாழ்வு என்பது பிறரை சார்ந்து, பிறரோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வாக கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அந்த கழுதைக் குட்டியின் மேல் கூடியிருந்த மக்கள் தங்கள் துணிகளை போடுகிறார்கள். அவரோடு திரண்டிருந்த மக்களெல்லாம் ஏழைகளாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழைகள் தங்களுக்கென்று இருந்த துணிகளைத் தான் கழுதைக் குட்டியின் மேல் போடுகிறார்கள். இயேசு மக்கள் நிலைக்குச் செல்கிறார். அவர்களுடைய எளிமை நிலையை ஏற்றுக் கொள்கிறார். அவர்களை சார்ந்து வாழ்கிறார். அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வை முன்வைக்கிறார்.
இதே நிகழ்வை கொஞ்சம் ஆழமாக, உள்நோக்கிப் பார்க்கும் பொழுது இது இறைவார்த்தையின் நிறைவாகக் கூறப்படுகிறது மத்தேயு நற்செய்தியில். மத்தேயு 21:4-5ல் நற்செய்தியாளர் செக்கரியா இறைவாக்கினர் 9:9 இந்த நிகழ்வில் நிறைவேறுவதாக கூறுகிறார்: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசன் உன்னிடம் வருகிறார். அவர் எளிமை உள்ளவர், கழுதையின் மேல் ஏறி வருகிறார்@ கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்.” ஆக இயேசுவின் வருகை இறைவார்த்தையின் நிறைவு, அது ஒரு அரசனுடைய வருகை, அது ஒரு எளிமையானவரின் வருகை, அது ஒரு சமாதானத்தின் வருகை (போர் வீரனைப் போல் குதிரையில் வரவில்லை).
இயேசு எல்லாம் தெரிந்தவரைப் போல் உள்ளே நுழைகிறார் (மாற்கு 11:1-3). கழுதைக் குட்டி முன்னே வைத்திருக்கிற இடத்தை இவர் அறிந்திருக்கிறார், அதை அவிழ்த்து வர உத்தரவிடுகிறார், யாரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கான பதிலையும் சொல்லி அனுப்புகிறார். ஆனால் நமக்குத் தெரியும் இதுதான் இயேசுவினுடைய முதல் பயணம் எருசலேமுக்குள். பின்வரும் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவர் போல் அவர் செல்கிறார். மாற்கு 11:4 ல் இரண்டு சாலைகள் சந்திக்கின்ற தெருவில் இருக்கும் என்று சொல்கிறார். சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவது போல தோன்றுகிறது. அவரோடு பின்வருகின்ற மக்கள் ஓசன்னா என்று பாடி அவரை அழைத்துச் செல்கின்றார்கள். அவர்களும் மீட்பின் வரலாற்றைப் பாடியே அவரை அழைத்துச் செல்கிறார்கள். ஆண்டவர் பெயரால் வருகிறவர் பேறுபெற்றவர் என பாடுகிறார்கள். வரவிருக்கும் தன் தந்தையின் அரசு பேறுபெற்றது என சொல்கிறார்கள். உன்னதத்தில் ஓசன்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். ஆக, இயேசுவின் வருகையானது ஒரு அரசாட்சியை முன்வைக்கிற, அதுவும் தாவீதின் வழியில் வரும் அரசாட்சியை முன்வைக்கிறது. இந்த அரசாட்சியின் வருகையால் மக்களுக்கு மீட்பு கிடைக்கிறது. இந்த மீட்பானது விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.
ஆம் அன்புக்குரியவர்களே! இயேசுவின் எருசலேம் வருகை ஏதோ ஒரு வழக்கமான, இயல்பான செயலாக இங்கே முன்வைக்கப்படவில்லை. வெளிப்படையாகப் பார்க்கும் பொழுது அது ஒரு இயல்பான செயலாகத் தோன்றினாலும,; அது உள்ளடக்கியிருக்கிற பொருள்கள் ஆழமானவை. அது ஒரு மீட்பரின் வரவு. அது ஒரு அரசனின் வரவு. அது ஒரு அமைதி அரசரின் வரவு. அது ஒரு தாவீதின் மரபில் வந்த அரசரின் வரவு. இந்த அரசர் மக்களுக்கு மீட்பு கொடுப்பதற்காக வருகிறார். நடக்கவிருக்கும் அனைத்தையும் அறிந்து தெரிந்தவராயிருக்கிறார். இந்த மீட்புச் செயலின் வழியாக விண்ணகம் ஆர்ப்பரிக்கின்றது. இதே இயேசுவை பின்பற்றுகிற நாம் அந்த மக்களைப் போல் மீட்பின் பாடலைப் பாடுவோம். நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம். மீட்பை கொடையாகப் பெறுவோம். இறையுறவில் நிறைவு பெறுவோம்.