எல்லா மதங்களும், எல்லா வாழ்க்கை வழிமுறைகளும் முன்வைக்கின்ற ஒரு பழக்கம் (பக்தி முயற்சி) நோன்பு. நோன்பு என்பது உணவு உண்பதை தவிர்ப்பதாகும்.
விவிலிய பின்ணனியில் பார்க்கும்பொழுது முதல் ஜந்து நூல்கள் (தோரா) இந்தப் பழக்கத்தை ஒரு ஒழுங்காக, சட்டமாக போதிப்பதில்லை.
· நீதிநூல்களில் தான் உண்ணா நோன்பிருப்பதை முதன்முதலாக ஒரு பழக்கமாக முன்வைக்கிறார்கள் இஸ்ராயேல் மக்கள். அவர்கள் எதிரிகளால் தாக்கப்படும்பொழுது, தோல்வியை தழுவும்பொழுது உண்ணா நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடுகின்றார்கள் (நீநூ 20:26).
· ஏரேமியா நூலில் மக்களின் நலனுக்காகவும், நாடு நலம் பெறுவதற்காகவும் அரசன் இறைவாக்கினரின் கூற்றுப்படி மக்களை நோன்பிருந்து செபிக்க அழைக்கிறான் (ஏரே 36:6-9).
இது ஒரு தனி மனித பக்தி முயற்சியாகவே தொடக்கத்தில் இருந்து வந்தது. நோன்பிருத்தல் அழுகையோடும், சாக்கு உடையோடும் கடவுள் மேல் இருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு செயலாக இருந்தது. பல வேளைகளில் இது செபத்தோடு இணைந்து செயல்பட்டது.
விவிலியம் மூன்று விதமான நோன்புகளைப் பற்றி பேசுகிறது.
1. சாதாரண உண்ணா நோன்பு. இங்கு உணவு மட்டும் தவிர்க்கப்படுகிறது, தண்ணீர் குடிக்கலாம் (லூக் 4:2).
2. முழுமையான உண்ணா நோன்பு. இங்கே தண்ணீரும் தவிர்க்கப்படுகின்றது (திப 9:9).
3. பகுதி உண்ணா நோன்பு (தானியேல் 10:3). இதை பத்திய உண்ணா நோன்பு அல்லது திட்டமிட்ட உண்ணா நோன்பு என்றும் கூறுவார்கள். சிறப்பாக உடல் நலனுக்காக இதை செய்வார்கள் (உடல் எடையை குறைக்க). ஆனால், தானியேல் இறை வெளிப்பாட்டிற்காக இதை செய்கிறார்.
விவிலியத்தில் நோன்பு என்பது கடவுளை அறிய, கடவுள் அனுபவம் பெற, மற்றும் கடவுள் சித்தத்தை தெரிந்து கொள்ள. பெரும்பாலும் இது தனிப்பட்ட முயற்சியாகவே செய்யப்படுகிறது.
· “அப்பொழுது மோசே அப்பமும் உண்ணவில்லை, தண்ணீரும் பருகவில்லை. நாற்பது பகலும், நாற்பது இரவும் ஆண்டவரோடு இருந்தார். உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்” (விப 34:28).
· “ஆகவே, அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி, தண்ணீர் மொண்டு, ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று அறிக்கையிட்டார்கள்” (1சாமு 7:6).
· “அப்பொழுது எலியா எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர் நாற்பது பகழும், நாற்பது இரவும் நடந்து ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்”; (1அரசன் 19:8).
· “உண்மையான உண்ணா நோன்பு என்ன என்பதைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்துகிறார்” (எசா 58:1-11).
· “இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும், ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள் என்று இறைவன் வாதாடுகிறார்”; (சக்கரியா 7:5).
· “நீங்கள் நோன்பிருக்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தை கழுவுங்கள்.” (மத் 6:17).
· “அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும் போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும், சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள் என்று கூறினார்” (திப 13:2).
ஆக, நோன்பிருத்தல் தன்னை மறப்பதற்காக, தன்னை மறுப்பதற்காக, தன்னை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்க, தன்னையே கடவுளுக்கு பலியிட.
நோன்பிருத்தலின் இறையியல் கருத்து: உணவு என்பது ஊனுடலைச் சார்ந்தது. இவ்வுலக உயிரைச் சார்ந்தது, நம்மில் நிறைவை ஏற்படுத்த. இவைகளை தவிர்க்கும் பொழுது நாம் கடவுளை நோக்குகிறோம், மறு உலகை பற்றி நினைக்கிறோம். ஆகவே தான், நோன்பிருத்தல் நம்மை ஒரே நோக்கோடு கூர்மைப்படுத்துகிறது. நமது உடல், உள்ளம், மனது, சிந்தனை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு இறைவனையும், இறைவன் சார்ந்ததையும் சிந்திக்க, நினைக்க, பேச, அனுபவிக்க. இதுதான் நோன்பின் ஆன்மீகம் என்றும் சொல்லலாம்.
இத்தவக்காலத்தில் நாம் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருக்கிறோம். அதிலும் சிறப்பாக திருநீற்றுப் புதன் அன்றும், பெரிய வெள்ளிக்கிழமை அன்றும் அதை நாம் கடமை செயலாக செய்கிறோம். இந்த நோன்புகள் என்னை கடவுளிடம் இட்டுச் செல்கிறதா? ஒரு இறையனுபவத்தை பெற செய்கிறதா? கடவுளிடமும், இறையனுபவத்தையும் நாம் செய்யும் நோன்புகள் வெளிப்படுத்தாவிட்டால் முன்பு கூறியது போல அவைகள் பகுதி உண்ணா நோன்பாக, வெறும் உடல் எடையை மட்டும் குறைப்பதற்கான ஒரு செயலாக மாறிவிடும்.
—————————
Rev. Fr. James Theophilus SDB