Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 14 எருசலேம் நோக்கியப் பயணம் முதல் அறிவிப்பு

Posted under Reflections on March 12th, 2016 by

நற்செய்திகள் நான்கும் இயேசுவை எருசலேம் நோக்கியப் பயணியாகவே சித்தரிக்கிறது. எருசலேம் தான் அவருடைய குறிக்கோளாகவும், அவருடைய உலக வாழ்க்கைப் பயணத்தின் கடை எல்லையாகவும் இருக்கிறது. இதில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவை பலமுறை எருசலேமில் போதிப்பவராகவும், பணி செய்பவராகவும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாஸ்காவிற்கும் அவர் எருசலேமுக்குச் செல்வதாக குறிப்பிடுகிறார் யோவான் நற்செய்தியாளர். லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவை ஒரு சில முறைகள் எருசலேமில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். அவர் குழந்தையாக இருந்தபொழுது எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டதை, இளம் வயதில் காணாமல் போன இயேசுவை எருசலேம் கோவிலில் கண்டுபிடித்ததைப் பற்றி லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியாளர் எருசலேமுக்கு இயேசு நேரடியாக செல்லவில்லை என்பதை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் எருசலேம் அருகிலுள்ள பெத்லகேமில் பிறந்ததனால் அங்கே சென்றிருக்கலாம் என யூகிக்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை ஒரே முறை தான் எருசலேமுக்குப் போகவைக்கிறார். அதுவும் தனது கலிலேயப் பணியை முடித்தப் பிறகு அவரது பயணம் எருசலேமை நோக்கித் தான் இருக்கிறது என்பதை மாற்கு குறிப்பிடுகிறார். இந்தப் பயணத்தைப் பற்றி மாற்கு நற்செய்தியிலே இயேசு மூன்று முறை முன்னறிவிக்கின்றார். ஒவ்வொரு அறிவிப்பின் போதும் சீடத்துவத்திற்கான முக்கியமான பண்புகளைப் பற்றியும் பேசுகின்றார்.

இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் எருசலேமை நோக்கிச் செல்ல வேண்டும். மாற்கு 8:31-38 ல் அவருடைய எருசலேம் பயணத்தின் நிறைவாக தலைமைக் குருக்களாலும், மறைநூல் அறிஞர்களாலும் அவர் கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று தன்னைப் பற்றி அவர் முன் அறிவிக்கிறார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்து கடிந்து கொள்கிறார். பேதுரு அவருடைய எருசலேம் பயணத்திற்குத் தடையாக இருக்கிறார். பேதுரு கலிலேயப் பணியையே முன்வைக்கிறார். ஏனென்றால் கலிலேயாவில் இயேசு பல புதுமைகளை செய்திருக்கிறார். மக்கள் அவரை பின்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஆகவே, சாவைப் பற்றி பேசுவதை பேதுருவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு இயேசு பேதுருவிடம் “என் கண்முன் நில்லாதே சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவைப் பற்றியே எண்ணுகிறாய்”(8:33) என்று கடிந்து கொள்கிறார். இதையே மத்தேயு நற்செய்தியிலே இயேசு: “நீ எனக்கு தடையாய் இருக்கின்றாய்” (மத் 16:23) என்று கூறுகிறார். ஆகவே, சாத்தான் என்பவன் கடவுள் சித்தத்திற்கு எதிராகச் செயல்படுபவன் என்றும், இயேசுவின் செயல்பாட்டுக்குத் தடையாக இருப்பவன் என்றும் குறிப்பிடுகிறார். நாமும் பலவேளைகளில் நம்முடைய எருசலேம் நோக்கியப் பயணத்தில் சாத்தான்களாக மாற முடியும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. அதன்பின் இயேசு கூறுகிறார்: “என்னைப் பின்பற்ற விரும்புபவர் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும். ஏனெனில் தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார், என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதை காத்துக் கொள்வார் (8:34-35).

ஆக இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கொடுக்கிற பாடம்:

· தன்னலம் துறக்க வேண்டும்.

· சிலுவையைத் தூக்க வேண்டும்.

· இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

· நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் உயிரை இழக்க வேண்டும்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பும் சீடர்கள் எருசலேமை நோக்கிப் பயணிக்க வேண்டும். இயேசு இந்தப் பயணத்தில் முன் சென்றிருக்கிறார். எனவே, இயேசுவைப் பின்பற்றுதல் அடித்தளமானது. நற்செய்திக்காக வாழ்வையும் இழக்கத் துணிய வேண்டும். அதிலும் சிறப்பாக சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும். சிலுவை என்பது இயேசு எதற்காக சிலுவையைத் தூக்கினாரோ அதே பொருளை முன்வைக்கிறது. மக்களைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக, மக்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவை மீட்டெடுப்பதற்காக, ஒரு விடுதலையின் அடையாளமாக சிலுவை இருக்கிறது இயேசுவுக்கு. ஆனால் மக்கள் பார்வையில் அது ஒரு இழிவுச் செயலாகவே கருதப்படுகிறது. இதைத் தான் பவுலடியார்: “சிலுவையைப் பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:18).

அன்புக்குரியவர்களே! தவக்காலத்தின் இறுதியில் நாம் சிலுவை நிகழ்வுகளைப் பற்றித் தியானிக்க இருக்கிறோம். இந்த எருசலேம் நோக்கியப் பயணம் சிலுவையில் நிறைவு பெறும். சிலுவை (துன்பங்கள், பாவத்திற்கான பரிகாரம், இகழ்ச்சி) போன்றவை இன்றைய உலகில் நமக்கும் மடமையாகத் தான் தோன்றுகிறது. ஆனால், அதுதான் கடவுளின் வல்லமை என்பதை நம்புவோம். நம் சிலுவைகளைத் தூக்குவோம்.

தவக்காலச் சிந்தனைகள் – 13 இரக்கம் நிறைந்தவர் இறைவன்

Posted under Reflections on March 12th, 2016 by

தவக்காலத்தின் குறிக்கோளாக அல்லது தவக்காலத்தின் நிறைவாக நமக்கு கொடுக்கப்படுவது இறை அனுபவமே. உயிர்த்த இயேசுவை அனுபவிக்க வேண்டும், அதுவும் உயிர்த்த இயேசுவில் இறைவனை அனுபவிக்க வேண்டும். இன்னும் சிறப்பாக அந்த இறைவனை இரக்கமாக அனுபவிக்க வேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம். இறைவனை இரக்கமாக அனுபவிக்கிறவன் அந்த இரக்கத்தை உலகில் வெளிப்படுத்த வேண்டும். “இறைத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”(லூக் 6:36) என்று அறைக்கூவல் விடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விவிலியமும் இறைவனை இரக்கமுள்ளவர் என்றே சித்தரிக்கிறது. “இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்புமிக்கவர், நம்பிக்கைக்குரியவர்”(விப 34:6). இந்த இறை இரக்கத்தை தியானிக்க அழைக்கும் நம் திருத்தந்தை அதற்கு விளக்கமும் கொடுக்கிறார்.

· இரக்கம் : இவ்வார்த்தை போற்றுதலுக்குரிய தூய மூவொரு கடவுளின் மறைபொருளை வெளிப்படுத்துகின்றது.

· இரக்கம் : இது கடவுள் நம்மை சந்திக்க வரும் ஒரு நிறைவான ஒப்பற்ற நிகழ்வு.

· இரக்கம் : இது தங்களின் வாழ்க்கைப் பாதையில் யாரெல்லாம் நேர்மையோடு தங்கள் சகோதர சகோதரிகளின் கண்களை உற்றுநோக்குகிறார்களோ அவர்கள் ஒவ்வொருவரின் மானுட இதயத்திலும் உறைந்து வாழும் அடிப்படைச் சட்டம்.

· இரக்கம் : இது நாம் பாவமுடைமையில் இருந்தாலும் எக்காலமும் நாம் அன்பு செய்கிறோம் என்ற நம்பிக்கையை நம் உள்ளங்களுக்கு வழங்கி, கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக உள்ளது.

திருப்பாடல் 136 இறைவனின் பேரன்பை, இரக்கத்தை வெளிப்படுத்துகிற பாடலாக இருக்கிறது. இறைவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்த அந்த புனித நிகழ்வை வெளிப்படுத்துகின்ற பாடல் இது. இரவு உணவு முடிந்த பிறகு இயேசுவும் இந்த திருப்பாடலை முழுமையாக பாடிவிட்டு (மத் 26:30) கெத்சமெனிக்குச் சென்றதாக விவிலிய விளக்க ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இயேசுவும் தன் பொதுப் பணிக்காலத்தில் தன்னுடைய போதனைகள் வழியாகவும் (காண் லூக் 15:1-32, மத் 18:21-35), அரும் அடையாளச் செயல்கள் வழியாகவும் (காண் மத் 9:36, 14:14, 15:34, லூக் 7:15) இறைவன் இரக்கம் நிறைந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார். இரக்கம் என்பது தந்தையின் செயல் மட்டுமன்று, அவருடைய உண்மை பிள்ளைகள் யார் என்பதை உறுதிபடுத்தும் அளவுகோலாகவும் அது உள்ளது என இயேசு உறுதிப்படுத்துகின்றார். சுருங்கக்கூறின் நாம் இரக்கத்தை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். காரணம் நமக்கு இரக்கம் காட்டப்பட்டுள்ளது. இரக்கத்தை நாம் எப்படி வாழ்ந்து காட்ட முடியும்? திருத்தந்தை பிரான்சிஸ் நம்மை உடல் சார்ந்த இரக்கச் செயல்கள், ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களைப் பற்றி சிந்திக்க அழைக்கிறார்.

உடல் சார்ந்த இரக்கச் செயல்கள்
• பசித்திருப்பவர்க்கு உணவு கொடுத்தல்
• தாகமாய் இருப்பவர்க்கு தண்ணீர் கொடுத்தல்
• ஆடையின்றி இருப்பவர்க்கு உடை கொடுத்தல்
• அன்னியரை வரவேற்றல்
• நோயாளியை குணமாக்கல்
• சிறையிலிருப்போரை சந்தித்தல்
• இறந்தவரை அடக்கம் செய்தல்
ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்கள்
• ஆலோசனைக் கூறல்
• அறியாமையில் உள்ளவர்க்கு கற்பித்தல்
• பாவிகளை நன்னெறிபடுத்தல்
• துயருற்றோருக்கு ஆறுதல் அளித்தல்
• குற்றங்களை மன்னித்தல்
• நமக்குத் தீங்கு செய்தோரை பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல்
• இறந்தோருக்காகவும், வாழ்வோருக்காகவும் செபித்தல்
இந்த இரக்கத்தின் ஆண்டின் தவக்காலத்தில் இறைவனின் இரக்கத்தை அனுபவிக்க, கொண்டாட அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் விவிலியம் வாசிப்போம். ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்று இறை இரக்கத்தை அனுபவிப்போம். ஆண்டவருக்காக 24 மணிநேரம் என்ற திருத்தந்தையின் கூற்றை ஆராதனை வழிபாடு வழியாக நடைமுறைப்படுத்துவோம். இறை இரக்க கதவுகள் இருக்கின்ற திருத்தலங்களை சந்திப்போம். இறை இரக்கத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

1 1,415 1,416 1,417 1,418 1,419 2,555